Monday, January 23, 2012

சிவ ஆகமம் – மறை ஓதுதல்

சிவ ஆகமம் – மறை ஓதுதல்

13.1 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் ஆகிய காலங்களில் வேத கோஷம் செய்யவேண்டும்.

13.2 அபிஷேகம், நைவேத்யம், தூப-தீபம் பூஜையின் முடிவு ஆகிய காலங்களில் பக்தர்கள் ஸ்தோத்ரங்கள் பாடலாம்.

13.3 வேதங்கள் ஓதிய பின் (அல்லது வேதங்கள் ஒதிக் கொண்டிருக்கும்போதே, மண்டபத்தின் மற்றோர் பகுதியிலிருந்து) தமிழ் மறைகளாம் பன்னிரு திருமுறைப் பாடல்களையும் மற்ற தோத்திரப் பாடல்களையும் ஓத வேண்டும்.

13.4 ஓதுவார்கள்: திருமுறைகளைப் பண்ணோடு ஓதுபவர்கள் ஓதுவார்கள் அல்லது ஓதுவார் மூர்த்திகள் என்று பெயர் பெறுவர்.

13.5 பண்; திருஞான சம்பந்தப் பெருமானுக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்ப்பாணரின் வழி வந்த, இசை வல்ல ஒரு பெண்மணியார் திருமுறைகளுக்கு ஏற்ப பண்கள் அமைத்ததாக வரலாறு. முன்னர் இருந்த 103 பண்களில் இக்காலம் பயிலப் பெறுபவை ஏறத்தாழ 23 பண்களே.

13.6 இசை மரபு ஒப்புமை: தமிழிசைப் பண்களில் வரும் ஏழு இசைகளுக்கு இணையான ஸ்வரங்கள் –

1 இளி – ஸ – ஷட்ஜம்

2 விளரி – ரி – ரிஷபம்

3. தாரம் – க – காந்தாரம்

4. குரல் – ம – மத்திமம்

5. துத்தம் – ப – பஞ்சமம்

6. கைக்கிளை – த – தைவதம்

7. உழை – நி – நிஷாதம்.

13.7 பாடலுக்குரிய இராகங்கள் – திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் மோஹன ராகத்திலும், திருவிசைப்பா – திருப்பல்லாண்டு பாடல்கள் அனைத்தையும் ஆனந்தபைரவி ராகத்திலும், பெரியபுராணப் பாடல்கள் அனைத்தையும் மத்தியமாவதி ராகத்திலும் பாடுவதே மரபு. மாற்றிப் பாடுவது முறையல்ல.

13.8 பண்களுக்குரிய இராகங்கள் : பண்கள் குறிப்பிடப்பட்டுள்ள திருமுறைப்பாடல்களை, அப்பண்களைக் கற்றுணர்ந்தவர் அவ்வாறே இசைப்பதே முறை. தமிழிசை கற்றியாதார், தமிழிசைப் பண்களுக்கு ஒத்த கருநாடக மரபு இராகங்களிலும் இசைக்கலாம்.

தமிழிசைப் பண் அதற்கொத்த இராகம்

1. நட்டபாடை (நைவளம்) – நாட்டை, கம்பீர நாட்டை
2. தக்கராகம் – காம்போதி
3. தக்கேசி – காம்போதி
4. பழந்தக்கராகம் – சுத்தசாவேரி
5. குறிஞ்சி – ஹரிகாம்போதி
6. வியாழக்குறிஞ்சி – ஸெளராஷ்ட்ரம்
7. அந்தாளிக்குறிஞ்சி – சாமா
8. மேகராகக் குறிஞ்சி – நீலாம்பரி
9. யாழ்மூரி – அடாணா
10. காந்தாரம் – நவரோஸ்
11. பியந்தைக் காந்தாரம் – நவரோஸ்
12. கொல்லி – நவரோஸ்
13. கொல்லிக் கௌவாணம் – நவரோஸ்
14. இந்தளம் – மாயாமாளவகௌளை
15. சீகாமரம் – நாதநாமக்ரியா
16. நட்டராகம் – பந்துவராளி
17. சாதாரி – பந்துவராளி
18. செவ்வழி – யதுகுலகாம்போதி
19. காந்தார பஞ்சமம் – கேதாரகௌளை
20. பஞ்சமம் – ஆகிரி
21. பழம்பஞ்சரம் சங்கராபரணம்
22. கௌசிகம் பைரவி
23. புறநீர்மை (நேர்திறம்) – பூபாளம், பௌளை
24. செந்துருத்தி (செந்திறம்) – மத்யமாவதி
25. திருக்குறுந்தொகை – மாயாமாளவகௌளை
26. திருத்தாண்டகம் – ஹரிகாம்போதி
27.திருநேரிசை – நவரோஸ் (ஸாமகான இசை போல)
28. திருவிருத்தம் – பைரவி, சங்கராபரணம், அல்லது ஒத்த ராகங்கள்.

No comments:

Post a Comment